சிங்கப்பூர் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைப்பு: செப். 11-ல் பொதுத் தேர்தல்!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் டோனி டான் நேற்று கலைத்தார். இதைத் தொடர்ந்து அந்நாட்டில் செப்டம்பர் 11-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மொத்த பலம் 89. அந்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. தொழிலாளர் கட்சி ஓரளவுக்கு செல்வாக்குடன் உள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சிக்கு 7 இடங்கள் கிடைத்தன.
விலைவாசி உயர்வு, வெளிநாட்டு தொழிலாளர்களில் குடியேற்றம் அதிகரிப்பு, அண்டைநாடுகளின் அச்சுறுத்தல் என பல்வேறு விவகாரங்களில் ஆளும் கட்சி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக போராடவும் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதமர் லீ சீன் லூங்கின் பரிந்துரையின் பேரில் அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று அதிபர் டோனி டானால் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டுதான் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் ஓராண்டுக்கு முன்னதாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11-ந் தேதி தேர்தல் நடைபெறும்; இதற்கான வேட்புமனுக்கள் செப்டம்பர் 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தந்தையான லீ குவான் யூ கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அவர் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.