சிங்கப்பூரில் களைகட்டிய தேசிய தின கொண்டாட்டம்.. மக்கள் உற்சாகம்!
சிங்கப்பூரின் தேசிய தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூர்: 52வது தேசிய தினம் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று சிங்கப்பூர் தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சிங்கப்பூரின் 52வது தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
9 ஆகஸ்ட் 1965ஆம் நாள்தான் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றது. அந்த நாளைத்தான் சிங்கையில் ஆண்டுதோறும் தேசிய தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.
வானில் வட்டமடித்த விமானங்கள்
தேசிய தினத்தையொட்டி விமானப்படை, கடற்படை தரைப்படை என முப்படைகளின கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. வானில் பாரசூட்டுகளுடன் பறந்த வீரர்கள், சிங்கை கொடியுடன் வானில் வட்டமடித்த விமானங்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின.
விருந்து படைத்த கலைநிகழ்ச்சிகள்
இதைத்தொடர்ந்து சிங்கப்பூரின் பாராம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.
வண்ண வான வேடிக்கைகள்
லேசர் ஒளி நிகழ்ச்சிகளும் வண்ண வான வேடிக்கைளும் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. தீவிரவாதிகளின் தாக்குதல்களை எப்படி முறியடிப்பது என்பது குறித்தும் தேசிய தின கொண்டாட்டத்தின் போது செய்து காட்டப்பட்டது.
கண்டுகளித்த அதிபர்
சிங்கப்பூரின் பாதுகாப்பை பறைசாற்றும் முப்படைகளின் அணிவகுப்பை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கண்டுகளித்தனர். ராணுவ அணிவகுப்பு மரியாதையை சிங்கப்பூர் அதிபர் டோனி டேன் கெங் யாம் ராணுவ வாகனத்தில் நின்றபடி ஏற்றுக்கொண்டார்.