சென்னையில் சிங்கப்பூர் எம்.டி.ஐ.எஸ் பல்கலை வளாகம் - அக்டோபர் முதல் படிப்புகள் ஆரம்பம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த பல்கலைக்கழகமான எம்.டி.ஐ.எஸ் சென்னையில் மற்றொரு பல்கலைக்கழகமான வேல்ஸ் பல்கலையுடன் இணைந்து தன்னுடைய கிளைகளை விரிவாக்க உள்ளது. ரூபாய் 46 கோடி செலவில் உருவாக உள்ள இந்த கல்லூரிகளில் டிப்ளமோ மற்றும் மேலாண்மை படிப்புகளும் வழங்கப்பட உள்ளன.
சிங்கப்பூரின் பிரபலமான மேலாண்மை பல்கலைக்கழகமான எம்.டி.ஐ.எஸ் சென்னையில் இந்தப் புதிய கல்வி நிலையங்களை திறக்க உள்ளது. அதற்காக சென்னையில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள எம்.டி.ஐ.எஸ் முதல் வருடம் டிப்ளமோ மற்றும் மேலாண்மை படிப்புகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அக்டோபரில் தொடங்கும் இந்தப் படிப்புகளுடன், மற்ற படிப்புகளும் பின்னர் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய வளாகத்தில் பயிலும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் வளாகத்திலும் சென்னை வளாகத்திலும் பயில வேண்டும்.
இந்திய மதிப்பில் 46.69 கோடி ரூபாய் செலவில், 70,000 சதுர அடி பரப்பளவில் இந்த கல்லூரி சென்னையில் அமைய உள்ளது. மலேசியா மற்றும் தாஸ்கெண்ட்டுக்கு அடுத்ததாக சென்னையில்தான் இந்த கல்லூரி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.