அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்த கோரும் சிங்களர் அமைப்புகள்!
அடேல் அம்மையார் இங்கிலாந்தில் தற்போது வசித்து வருகிறார். வெளிநாடு வாழ் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு மும்முரம் காட்டி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் பல சிங்கள அமைப்புகள் ஒன்று சேர்ந்து இலங்கை அரசுக்கு ஒரு மனுவை அனுப்பி வைத்துள்ளன. அதில், சிறுவர்களுக்கு அடேல் பாலசிங்கம்தான் போர் பயிற்சி கொடுத்ததாகவும் அவர் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் அடேல் பாலசிங்கத்தை நாடு கடத்த வேண்டும் என்று இங்கிலாந்துக்கு இலங்கை அரசு கோரிக்கை வைக்க வேண்டும். இதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு பலமான ஒரு எச்சரிக்கையை இலங்கை விடுக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.