அண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறயா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்
சியோல்: வட கொரியா அதிபர் கிம் ஜாங்-உன்னின் தங்கைக்கு, அந்த நாட்டின் 2வது அதிகாரம் கொண்ட பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக, தென்கொரியா உளவுத்துறை கண்டறிந்து, தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் உன், தங்கை பெயர் கிம் யோ-ஜாங். 30 வயதுதான் ஆகிறது. இதுவரை அவர், கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் (WPK) பிரச்சார துறையின் இயக்குநராக பதவி வகித்து வந்தார்.
அவர் தொழிலாளர் கட்சியின், அரசியல் பிரிவின் மாற்று உறுப்பினராகவும் பணியாற்றினார், இது அந்த கட்சிக்குள், மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும்.
உளவுத்துறை
சமீபத்தில், பியோங்யாங்கில் பொது விழாக்களில் கிம் யோ-ஜாங் கலந்துகொண்டதை பார்க்க முடிந்தது. தொழிலாளர் கட்சியின், மத்திய குழு துணைத் தலைவரான ஜெனரல் கிம் யோங்-சோலுக்கு அடுத்தபடியாக போடப்பட்ட இருக்கையில் அவர் அமர்ந்திருந்ததை ஊடகங்களும், பிற நாட்டு உளவுத்துறையும் கவனிக்க தவறவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வட கொரியா பயணத்தின் போது நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சி என்பதால், மொத்த நாடுமே, கிம் யோ-ஜாங் பதவி உயர்வு பெற்ற தகவலை அரசல் புரசலாக பேச ஆரம்பித்தது.
அதிகாரம்
இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் வட கொரிய அதிகாரிகளின் இருக்கைகள், வட கொரியாவின் ஆளும் கட்டமைப்பிற்குள் அவர்களின் அதிகாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கவனமாக ஏற்பாடு செய்யப்படுவதுதான் வழக்கம். எனவே, கிம் யோ-ஜாங் அமர்ந்திருந்த இருக்கை, அவருக்கான முக்கியத்துவத்தை உணர்த்திவிட்டது.
ஊடகங்களிடம் சொன்ன உளவுத்துறை
கிம் யோ-ஜாங், வட கொரியாவின் இரண்டு அல்லது மூன்றாவது மிக சக்திவாய்ந்த பதவிகளில் ஒன்றிற்கு உயர்த்தப்பட்டுள்ளார் என்று தென் கொரியா உளவுத்துறை உறுதியாக நம்புகிறது. தென்கொரியாவின் உளவு அமைப்பான, தேசிய புலனாய்வு சேவை (என்ஐஎஸ்) நேற்று தென் கொரியாவின் எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையின்போது, இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொண்டுள்ளது. தென் கொரிய தேசிய புலனாய்வுக் குழுவின் தலைவர் லீ ஹை-ஹூன் ஊடகங்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் பெண் அதிகாரி
அதே நேரத்தில், வட கொரியாவில் உயர்மட்ட பெண் அதிகாரியாக விளங்கிய, கிம் சாங்-ஹேயின் அதிகாரம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. வட கொரிய அணுசக்தி துறையில் பொறுப்பாளராக இருந்த அவர், அரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டு தொழிலாளர் முகாமுக்கு அனுப்பப்பட்டதாக சியோலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது விழா
"அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் வட கொரியா தலைவருக்கு துரோகம் இழைக்கப்பட்டது" என்று கிம் சாங்-ஹே, மீது குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஜூன் 9 அன்று கடைசியாக பொது வெளியில் தோன்றினார். வட கொரிய தலைநகரில் ஒரு ஜிம்னாஸ்டிக் விழாவில் அன்று அவர் கலந்து கொண்டார். பிறகு, அவர் பற்றி எந்த தகவலும் இல்லை.