கள்ளத்தொடர்பு சந்தேகம்... கோபத்தில் இரு தங்கைகளை சுட்டுக்கொன்ற பாக். இளைஞர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்து தனது இரு தங்கைகளை அண்ணனே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட லாகூர் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது 41-வது வடக்கு சவுக் பகுதி. அங்கு வாழ்ந்து வரும் உமர் ஹயாத் என்ற இளைஞருக்கு, தனது இரு தங்கைகள் மீது சந்தேகம். அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக உமர் சந்தேகித்தார்.
இது தொடர்பாக தனது தங்கைகளுடன் உமர் வாக்குவாதம் செய்துள்ளார். தங்களது குடும்ப கவுரவத்தை அவ்விரு பெண்களும் சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அண்ணனின் குற்றச்சாட்டை தங்கைகள் மறுத்துள்ளனர்.
ஆனால், ஆத்திரமடைந்த உமர், தனது தங்கைகளைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று அவர் தலைமறைவானார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், இரு பிரேதங்களையும் கைப்பற்றி, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கவுரவக்கொலை என்ற குற்றப்பிரிவின்கீழ் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள உமரைத் தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 870 பெண்கள் இதுபோல் கவுரவக்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.