சிவகங்கை கிளஸ்டர்- மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கைது-5 மாதம் சிறை
கோலாலம்பூர்: மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 5 மாதம் சிறை தண்டனையும் ரூ21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் கெடா மாநிலத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா என்பவர் நாசிக் கண்டார் என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த மாதம்தான் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு அவர் திரும்பினார். மலேசியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்.
குடலை புரட்டும் ஆபாசம்.. அசிங்கமான வீடியோக்கள்.. டார்ச்சர்.. அமேசான் டெலிவரி பாயை அமுக்கிய போலீஸ்!
நிசார் முகமதுவுக்கு கொரோனா
நிசார் முகமதுவுக்கு முதலில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்தது. ஆனால் 2-ம் கட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் நிசார் முகமதுவை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தங்க வேண்டும் என மலேசியா அரசு உத்தரவிட்டது.
சிவகங்கை கிளஸ்டர் என பெயர்
ஆனால் இதனை மீறி நிசார் முகமது வெளி இடங்களில் சுதந்திரமாக வலம் வந்திருக்கிறார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஹோட்டல் பணியாளர்கள் என பல பகுதிகளைச் சேர்ந்த 45 பேருக்கு கொரோனா தொற்று படுவேகமாக பரவியது. இது மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவை கடுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் நிசார் முகமதுவால் 45 பேருக்கு கொரோனா பரவியதால் இதற்கு சிவகங்கை கிளஸ்டர் எனவும் பெயரிட்டது மலேசியா அரசு.
இந்தியாவில் உதாரணங்கள்
ஒரு நபர் மூலம் பலருக்கும் கொரோனா பரவியதால் அதற்கு கிளஸ்டர் என பெயரிடப்பட்டது. இந்தியாவில் டெல்லி மாநாடு, கோயம்பேடு சந்தைகள் மூலம் கொரோனா பரவியபோது அதற்கும் டெல்லி கிளஸ்டர், கோயம்பேடு கிளஸ்டர் என பெயரிடப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது. மலேசியாவில் கடந்த சில நாட்களாக சிவகங்கை கிளஸ்டர் குறித்துதான் பேசப்பட்டும் வந்தது.
ஹோட்டல் உரிமையாளர் கைது- சிறை
இந்நிலையில் நாசிக் கண்டார் ஹோட்டல் உரிமையாளர் நிசார் முகமதுவை மலேசியா அரசு, விதிகளை மீறி கொரோனாவை பரப்பியதற்காக கைது செய்தது. அவருக்கு 5 மாத சிறை தண்டனையும் ரூ21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவினால் அந்த நபர்களின் சொந்த ஊரை சேர்த்து கிளஸ்டர் என பெயரிட்டு வருகிறது மலேசியா அரசு என்பது குறிப்பிடத்தக்கது.