சீனாவில் சிறுமியைக் காப்பாற்ற நினைத்து நீரில் மூழ்கிய குடும்பம் - 7 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவில் ஆற்றில் மூழ்கிய தங்களது குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியைக் காக்க அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் முயன்றனர். கடைசியில் 7 பேருமே ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது ஷான்டோ நகரம். இங்குள்ள ஜின்சாவோ என்ற பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு ஏராளமான பேர் ஈஸ்டரையொட்டி வந்திருந்தனர். அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் ஓய்வாக இருந்தனர். அப்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி வூ சுங், ஆற்றில் இறங்கி கைகளைக் கழுவியுள்ளார். அப்போது தவறுதளாக ஆற்றில் விழுந்து விட்டார்.
இதைப் பார்த்து பதறிப் போன அவரது குடும்பத்தினர் - ஒரு கணவன், மனைவி, அவர்களின் 3 பிள்ளைகள், சகோதரர் ஆகியோர் ஓடி வந்தனர். அனைவரும் மனிதச் சங்கிலி போல நின்று சிறுமியை மீட்க முயன்றனர். ஆனால் அதில் துரதிர்ஷ்டவசமாக அனைவரும் ஆற்றில் மூழ்கி விட்டனர். சிறிது நேரத்தில் 7 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மீட்புப் படையினர் விரைந்து வருவதற்குள் எல்லாமே முடிந்து போய் விட்டது. நீரில் மூழ்கி இறந்த 7 பேருக்குமே நீச்சல் தெரியாதாம். இருந்தாலும் சிறுமியை மீட்க அவர்கள் உயிரைப் பணயம் வைத்து இறங்கினர். ஆனால் எல்லாமே துரதிர்ஷ்டவசமாக போய் விட்டது.
இறந்தவர்களில் 2 பேருக்கு 15 மற்றும் 13 வயதாகும்.