இமயமலையில் கடும் பனிப் புயல்... மலையேற்ற பாதை அமைத்த 6 பேர் பலி
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிப் புயலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் மலையில் மலையேறுவதற்கான சீசன் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. இதற்காக சரியான பாதை அமைக்கும் பணியில் நேபாள நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது கிட்டத்தட்ட 5800 அடி உயரத்தில் பாப்கார்ன் பீல்ட் என்ற இடத்தில் இன்று அதிகாலை 6.45 மணியளவில், அதாவது இந்திய நேரப்படி 11மணியளவில் பனிச்சரிவும், பனிப் புயலும் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பணியில் இருந்த வீரர்கள் ஆறு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்தபோது மொத்தம் 14 நேபாள வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆஸ்திரேலியர்கள் யாரும் இதில் இல்லையாம். அனைவருமே நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா வீரர்கள் ஆவர்.
தற்போது அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான கைடுகள், சுற்றுலாப் பயணிகள், மலையேற வந்துள்ளோர் என பெருமளவில் முகாமிட்டுள்ளனர். அடுத்த மாதத் தொடக்கத்தில் இவர்கள் சிகரம் ஏறத் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.