சத்தம் போடாமல் பூமியைக் கடந்து போன 'செத்து'ப் போன வால்நட்சத்திரம்
வாஷிங்டன்: செயலிழந்த வால் நட்சத்திரம் ஒன்று பூமியைக் கடந்து போயுள்ளது. நேற்று இந்த நிகழ்வு நடந்துள்ளது. மிகப் பெரிய மண்டை ஓடு போல இந்த வால் நட்சத்திரம் காட்சி அளித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஹாலோவியன் தினத்தன்று இந்த மண்டை ஓடு வடிவ வால்நட்சத்திரம் பூமியைக் கடந்து போயிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வால்நட்சத்திரத்தின் பெயர் 2015 டிபி 145என்பதாகும். இதை சமீப காலமாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இது பூமியைக் கடந்தபோது எந்தவிதமான பாதிப்பையும் பூமிக்கு கொடுக்கவில்லை என்று நாசா கூறியுள்ளது.
பூமியிலிருந்து 1.3 லூனார் தொலைவில் அதாவது 4 லட்சத்து 86 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இந்த வால் நட்சத்திரமானது பூமியைக் கடந்து போயுள்ளது.
இது ஒரு இறந்து போன வால்நட்சத்திரம். பார்ப்பதற்கு பெரிய மண்டை ஓடு போல இது உள்ளது என்று நாசா வி்ஞ்ஞானி கெல்லி பாஸ்ட் கூறியுள்ளார்.
இந்த வால் நட்சத்திரமானது இந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. ஹவாயில் உள்ள பேன் ஸ்டார்ஸ் 1 என்ற டெலஸ்கோப்தான் இதைக் கண்டுபிடித்தது.
அடுத்து இந்த வால் நட்சத்திரம் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பூமிக்கு அருகில் வருமாம். அப்போது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே 3.8 கோடி கிலோமீட்டர் தொலைவில் இது பூமியைக் கடந்து செல்லுமாம்.