மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பனிப்பொழிவு
ஜெருசலம்: மத்திய கிழக்கு நாடுகளில் சிலவற்றில் குளிர்காலத்தில் ஏற்படும் புயல் வீசுகிறது. இந்நிலையில் அங்கு பனிப்பொழிவு வேறு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் சிலவற்றில் கடும் பனிமழை பெய்து வருகிறது. இஸ்ரேலின் மலைப்பகுதியான கோலன் ஹைட்ஸ் பனியால் மூடி வெள்ளை நிறமாக காட்சி அளிக்கிறது. மேலும் லெபனானில் உள்ள மலைப்பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவாக உள்ளது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு இருப்பது பலருக்கும் கவலை அளித்துள்ளது. ஏனென்றால் சிரியாவில் நடக்கும் போரால் அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பெக்கா பள்ளத்தாக்கில் தான் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் இன்று காலை பனிமூட்டமாக இருந்தது. இதனால் இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் அங்கு வரவேண்டிய விமானங்கள் லாகூருக்கு திருப்பிவிடப்பட்டது.
பனி தவிர லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேலில் கடல் சீற்றமாக வேறு உள்ளது.