இணையதள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ள ஸ்னோடென்
மாஸ்கோ: ஸ்னோடென்னுக்கு இணைய தள வேலை ஒன்று கிடைத்திருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புலனாய்வுத் துறையில் பணி புரிந்து வந்த எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்கா மற்ற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தினார். இதனால் அமெரிக்க அரசின் கண்டனத்திற்கு ஆளானார் ஸ்னோடென்.
தலைமறைவான ஸ்னோடென்னை அமெரிக்கா தேடியது. அதனைத் தொடர்ந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புக அனுமதி கேட்டார் ஸ்னோடென். இறுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் தற்காலிக அனுமதி பெற்று அந்நாட்டின் உள்ளே நுழைந்தார்.
இந்நிலையில், கடும் பணத்தேவையில் இருந்த ஸ்னோடென்னுக்கு இணையதள வேலை ஒன்று கிடைத்திருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
பணத் தேவை...
ரஷ்யாவில் புகலிடம் கிடைத்ததைத் தொடர்ந்து ஸ்னோடென் தலைமறைவாகவே வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது ஸ்னோடெனின் வக்கீல் தன்னுடைய பேட்டிகளில் அவருடைய பணத்தேவையைப் பற்றிக் குறிப்பிட்டு வந்தார்.
இணையதள வேலை...
இந்நிலையில், தற்போது ரஷ்யாவில் குடிபுகுந்து மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் ஸ்னோடெனுக்கு இணையதள நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளதாக அவரது வக்கீல் அனடோலி குச்சரீனா நேற்று தெரிவித்துள்ளார்.
வலைத்தள மேம்பாட்டு பணி....
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘இன்று முதல் பெரிய ரஷ்யன் நிறுவனம் ஒன்றில் ஸ்னோடென் வேலை செய்ய இருக்கிறார். பிரதானமாக உள்ள ரஷ்யன் வலைத்தளம் ஒன்றினை மேம்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளார்' என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக...
பாதுகாப்புக் காரணம் கருதி ஸ்னோடென் பணி புரிய உள்ள நிறுவனத்தின் பெயரை அனடோலி வெளியிடவில்லை.
யூகங்கள்....
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் பேஸ்புக்கிற்கு இணையான கோன்டக்டே நிறுவனத்தின் தலைவரான பவெல் பகிரங்கமாக ஸ்னோடெனுக்கு வேலை தருவதாக அறிவித்தார். அதனால் இந்த நிறுவனமே தற்போது ஸ்னோடெனை பணியில் அமர்த்தியிருக்கக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது குறித்து அந்நிறுவனத்தின் பத்திரிகைத் தொடர்பாளரான ஜார்ஜி லோபுஷ்கின் கருத்து தெரிவிக்கவில்லை.
தொடரும் மர்மம்...
இந்நிலையில், அந்நாட்டிலுள்ள மற்ற இரண்டு பெரிய இணையதள நிறுவனங்களும் ஸ்னோடெனைப் பணியில் அமர்த்தவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. எனவே, ஸ்னோடென் பணிபுரிய உள்ள கம்பெனி குறித்து மர்மம் தொடர்கிறது.
நன்கொடை....
இதுவரை, அவரது ஆதரவாளர்கள் இணையதளம் மூலம் 49,000 டாலர் நன்கொடை திரட்டி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.