அமெரிக்காவில் செம பனிப் புயல்.. விமானங்கள் ரத்து.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Recommended Video
சிகாகோ: அமெரிக்காவில் வீசி வரும் பனிபுயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
'Thanksgiving day' நிறைவு நாளான ஞாயிற்று கிழமை முதல் மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. சாலைகளில் பனி பல அடி உயரத்திற்கு படர்ந்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 2 அங்குலம் வரை பனி அதிகரித்து வருகின்றன.
தென்கிழக்கு நெப்ராஸ்கா, வடகிழக்கு கன்சாஸ், வடமேற்கு மிசூரி மற்றும் தென்மேற்கு அயோவா உள்ளிட்ட மாகாணங்களில், பனிப்புயல் காரணமாக 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று வடமேற்கு மாநிலங்களை நோக்கி பனிப்புயல் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை மோசமானதன் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1,200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்சாஸ் சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகபட்சமாக 750 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
பனிப்புயல் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.