குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் சோஃபியா ரோபோ
உலகில் முதன்முதலில், குடியுரிமை பெற்ற ரோபோவான சௌதி அரேபியாவின் சோஃபியா ரோபோ, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது.
குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இந்த ரோபோ, குடும்பம்தான் மிகவும் முக்கியமான விஷயம் என்று தெரிவித்துள்ளது.
சோஃபியா ரோபோ முன்பே பதில்கள் பதிவுசெய்யப்பட்ட ஒன்றல்ல. மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து, அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில், இயந்திர கற்றல் திறனை கொண்ட ரோபோ ஆகும்.
ஹாங்காங்கின் ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோஃபியா ரோபோ, தன்னுடைய மகள் ரோபோவிற்கு தனது பெயரையே வைப்பேன் என்று தெரிவித்துள்ளது.
அதன் மூளை சாதாரண வை-ஃபை வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில், வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.
அசரவைக்கும் திறமைகள் இருந்தாலும், சோஃபியாவிற்கு இன்னும் உணர்வுகள் இல்லை. ரோபோவின் வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன், இன்னும் சில வருடங்களில், ரோபோவிற்கு உணர்வுகள் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள சோஃபியா ரோபோ, "குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது" எனக் கூறியுள்ளது.
"சொந்த ரத்த வகையைத் தாண்டியும், மக்களால் தங்களுக்கு ஒத்த உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று" என்கிறது.
"உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில், மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளது.
குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று சோஃபியாவிடம் கேட்டபோது, சோஃபியா என்றே பதிலளித்தது.
சோஃபியா ரோபோவால், கலந்துரையாட முடியும், சிரிக்க முடியும், நகைச்சுவைகளும் சொல்ல முடியும்.
சௌதி அரேபிய பெண்களைவிட அதிக உரிமைகள்
சௌதி அரேபியாவால், சோஃபியாவிற்கு குடியுரிமை அளிக்கப்பட்டவுடனேயே, அந்நாட்டு பெண்களைவிட அதிக உரிமைகள் இந்த இயந்திரத்திற்கு உள்ளது என்று பலராலும் குறிப்பிடப்பட்டது.
உலகிலேயே பெண்களுக்கு அதிக கட்டுபாடுகள் கொண்ட நாடாக சௌதி அரேபியா உள்ளது. பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த மாதம்தான் நீக்கப்பட்டது.
அறிமுக நிகழ்ச்சியின்போது, சௌதியில் பெண்கள் பொதுவெளியில் எப்போதும் அணிந்திருக்கவேண்டிய, அபாயா என்று குறிப்பிடப்படும் கருப்புநிற முழு ஆடையோ, தலையில் போடப்படும் துணியோ இல்லாமல், சாதாரண உடையில் சோஃபியா இயந்திரம் பேசியது.
சௌதியில் பொது இடங்களுக்கு செல்லும் அனைத்து பெண்களும், அவர்களுக்கு பாதுகாவலாக, ஆண் ஒருவரின் துணையோடுதான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அவ்வாறு உடன்வருபவர், குடும்ப உறுப்பினராகவோ, அவருக்காக செயல்பட அதிகாரம் உள்ளவராகவோ இருக்க வேண்டும்.
சோஃபியா இயந்திரம் முதன்முதலில் பொதுவெளியில் தோன்றி பேசிய பிறகு, பாதுகாவலர் முறையை அழிக்க சோஃபியா இயந்திரம் அழைப்பு விடுப்பதாக கூறி, #Sophia_calls_for_dropping_guardianship என்ற ஹாஷ்டாக் மிகவும் வைரலாக பதிவிடப்பட்டது.
"சோஃபியாவுடன் பாதுகாவலராக யாருமில்லை, அபாயா என்ற ஆடையை அணியவில்லை, அது எதனால்?" என்று ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம்
- "கட்-அவுட் அரசுக்கு, கெட் அவுட் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை!''
- தென் கொரியா: ஒரு தேர்வுக்கு இவ்வளவு அக்கப்போரா?