மலேசிய விமானத்தின் காக்பிட்டில் என்ன நடந்தது... ஏன் அடிக்கடி பறக்கும் உயரத்தை மாற்றினார் பைலட்...?
கோலாலம்பூர்: விபத்தில் சிக்கியதாக மலேசியாவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்ட விமானம் மாயமாவதற்கு முன்னர் அதிரடியாக உயரக் குறைப்பு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதனால், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் விமானத்தின் காக்பிட்டில் என்ன நடந்தது என்ற சந்தேகங்களுக்கு விடை தேடப்பட்டு வருகிறது.
கடந்த 8ம் தேதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென மாயமானது.
முதலில் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து கிடைத்த முரண்பட்ட தகவல்களால் விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உண்டானது. அதனைத் தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணியில் சுமார் 26 நாடுகளின் விமானங்கள், கப்பல்கள் இறங்கின. சில நாடுகளின் செயற்கைக்கோள்களும் இந்த தேடும் பணியில் ஈடுபட்டன.
இருப்பினும் விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில், இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் மற்றும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில், 17 நாட்களுக்கு பிறகு அந்த விமானம் குறித்து நேற்று உறுதியான தகவல் கிடைத்தது. அதன்படி, இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏறத்தாழ 2500 கிலோமீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்து மூழ்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, மலேசிய விமானம் அடிக்கடி தன் பறக்கும் உயரத்தை மாற்றியதாக ரேடாரில் பதிவான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிரடியாக மாறிய உயரம்...
அதாவது தரையில் இருந்து சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், மீண்டும் மலேசியாவை நோக்கி பொசிஷன் செய்யப்பட்டவுடன், அதன் அல்டிடியூட் 45,000 அடிக்கு மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
கூடிப் பின் குறைப்பு...
மலேசியாவின் பினாங் பகுதியில் உள்ள தீவுகளை நெருங்கியபோது, விமானத்தின் உயரம் 23,000 அடிக்கு குறைக்கப் பட்டுள்ளது. இடையில் அதன் உயரம் 12,000 ஆயிரம் அடியாக ரேடாரில் பதிவாகியுள்ளது.
அபாயகரமாக குறைப்பு...
அதன்பின் மீண்டும் 35,000 அடி உயர்ந்துள்ளது. கடைசியாக கடலுக்கு மேலாக பறந்துகொண்டு இருக்கையில் விமானத்தின் அல்டிடியூட் மிக அபாயகரமான அளவில், 5,000 அடிக்கு குறைக்கப்பட்டுள்ளது.
சதிச்செயலா..?
விமானத்தின் பறக்கும் உயரம் இவ்வாறு அதிரடியாக மாறியதன் பிண்ணனியில் சதிச் செயல் இருக்கலாமோ என அஞ்சப் படுகிறது. அதாவது காக்பிட்டுக்குள் புதிதாக யாரோ புகுந்து விமானிகளிடம் இருந்து கன்ட்ரோலை பெறுவதற்கு வன்முறையை பயன்படுத்தியிருக்கலாம். அல்லது, இரு விமானிகளில் ஒருவர் விமானத்தை கடத்த முயல, மற்றவர் அதை தடுக்க முயன்றிருக்கலாம் என அனுமானிக்கப் படுகிறது.
நடந்தது என்ன?
காக்பிட்டுக்குள் நடந்த அந்த பலப்பரீட்சையில் இவர்கள் விமானத்தின் கன்ட்ரோல் சுவிட்சுகளின் மீது விழுந்து புரண்டால், அல்ட்டிடியூட் கூடி, குறைந்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தீ விபத்து...
அதிரடியாக பறக்கும் உயரம் குறைக்கப்பட்டதன் விளைவாக விமானம் தீ பிடித்து சிதறி கடலில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடரும் மர்மம்...
ஏனெனில், விமானம் விபத்தில் சிக்கப் போகிறது எனத் தெரிந்திருந்தால் பைலட் நிச்சயமாக அது தொடர்பாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தெரிவித்திருப்பார். ஆனால், அவ்வாறு ஏதும் நிகழாததால் விபத்தின் பிண்ணனியில் சதி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.