திருட்டிற்குப் பயந்த தென் ஆப்பிரிக்க அரசு... ரகசிய இடத்தில் கொரோனா தடுப்பூசியை சேமிக்க முடிவு
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் திருட்டிற்குப் பயந்து கொரோனா தடுப்பூசியை ரகசிய இடத்தில் சேமிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மேலும், பல நாடுகளில் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கான ஆய்த்த பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள தென் ஆப்பிரிக்காவிலும் விரைவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகி
சீரம் தடுப்பூசி
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் பொறுப்பு புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவிலும் இந்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி
அதன்படி தென் ஆப்பிரிக்க அரசு 15 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை சீரம் நிறுவனத்திடம் ஆர்டர் அளித்துள்ளது. அவற்றில் முதல் 10 லட்சம் டோஸ்கள் இம்மாத இறுதியிலும், அடுத்த 5 லட்சம் டோஸ்கள் அடுத்த மாத தொடக்கத்திலும் தென் ஆப்பிரிக்க அரசுக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரகசிய இடத்தில் சேமிப்பு
இந்நிலையில், இந்தியாவிலிருந்து பெறப்படும் கொரோனா தடுப்பூசி மிகவும் ரகசியமான இடத்தில் சேமித்து வைக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் போபோ மஜா கூறியுள்ளார். இந்த கொரோனா தடுப்பூசி திருடப்பட்டு, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டாலும், அவை எங்கே சேமிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படமாட்டாது என்று அவர் தெரிவித்தார்.
தடையின்றி நடக்க நடவடிக்கை
இருப்பினும், தென் ஆப்பிரிக்க அரசு இதுவரை ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தேவையான அனுமதியை வழங்கவில்லை. இது குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ் கூறுகையில், "ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பதற்கான இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடைபெறுகிறது. மிக விரைவில் அந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படும். தடுப்பூசி விநியோகமும் தடையின்றி நடக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
தென் ஆப்பிரிக்கா கொரோனா பாதிப்பு
ஆப்பிரிக்கா கண்டத்திலேயே கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக சுமார் 17,241 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 12.31 லட்சத்தை எட்டியுள்ளது. அதேபோல, கொரோனாவால் அந்நாட்டில் 33,163 பேர் பலியாகியுள்ளனர்.