பார்க்க இவ்ளோ சாதுவா இருக்குதே.. இந்த நாயா அப்டி பண்ணுச்சு?
திருமண மோதிரத்தை விழுங்கிய நாய்யின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஜகார்த்தா: தன் எஜமானியின் நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கிய நாயை, வாந்தி எடுக்க வைத்து மீண்டும் மோதிரத்தை மீட்ட சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.
குழந்தைகள் இருக்கும் இடத்தில் அவர்கள் விழுங்குவது போல் சிறிய பொருட்களை வைக்கக்கூடாது எனக் கூறுவார்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நாய், பூனை, கோழி போன்ற உயிரினங்களுக்கும் பொருந்தும். பளபளப்பாக, விழுங்கத் தூண்டும் வகையில் உள்ள பொருட்களை அவைகள் உணவு எனக் கருதி சமயங்களில் விழுங்கி விடுவதுண்டு.
அப்படித்தான் பளபளப்பாக இருந்த தன் எஜமானியின் மோதிரத்தை விழுங்கி இணையத்தில் வைரலாகியுள்ளது நாய் ஒன்று.
குறும்பான நாய்
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பெப்பர் என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது அறையில் பெப்பரை விளையாட விட்டு விட்டு அப்பெண் குளிக்கச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, அப்பெண் மேஜையில் கழட்டி வைத்து விட்டுச் சென்ற அவரது திருமண நிச்சயதார்த்த மோதிரத்தைக் காணவில்லை.
எக்ஸ்ரே
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், அப்போது அங்கு யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்த மோதிரத்தை பெப்பர் தான் விழுங்கி இருக்க வேண்டும் என முடிவு செய்தார். எனவே உடனடியாக பெப்பரை அவர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெப்பருக்கு எக்ஸ்ரே செய்து பார்க்கப்பட்டது.
வாந்தி
அதில், பெப்பரின் வயிற்றில் மோதிரம் இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து பெப்பருக்கு உரிய மருந்துகள் கொடுக்கப்பட்டு அது வாந்தியெடுக்க வைக்கப்பட்டது. அப்போது அதன் வயிற்றில் இருந்த மோதிரம் வெளியில் வந்து விட்டது.
புகைப்படம் வெளியீடு
சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவமனை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பெப்பரின் புகைப்படத்தை வெளியிட்டது. கூடவே, ‘என்னுடைய பெயர் பெப்பர். எனக்கு கொஞ்சம் குமட்டலாக வந்தது. மருத்துவர் நான் வாந்தி எடுக்க எதையோ கொடுத்தார்.
நகைச்சுவை பதிவு
நான் எனது அம்மாவின் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கி விட்டேன். அதனால் தான் மருத்துவர் வாந்தி எடுக்க சொன்னார். வேறு எதுவும் கேட்கதீர்கள்' என நகைச்சுவையாக பேப்பரே பேசுவது போல் பதிவிட்டனர். கூடவே பெப்பரின் எக்ஸ்ரே படத்தையும் வெளியிட்டனர்.
வைரல்
மருத்துவமனை வெளியிட்ட புகைப்படத்தில் பெப்பரின் சாதுவான தோற்றத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அதனை கலாய்த்து பதிவுகளை வெளியிடத் தொடங்கி விட்டனர். இதனால் இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி விட்டது.