கொரோனா கிளஸ்டர்.. தெற்கு ஆஸ்திரேலியாவில் போட்டாச்சு முழு லாக் டவுன்.. மக்கள் வெளியே வரக் கூடாது
சிட்னி: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம், இன்று இரவு முதல், ஆறு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
பள்ளிகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் நள்ளிரவு முதல் மூடப்பட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தனைக்கும்.. இந்தியா போல மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அங்கு பதிவு செய்யப்படவில்லை. இந்த மாகாணத்தில் 22 நோயாளிகள் கண்டறியப்பட்டதால் அதை கிளஸ்டர் என்று அறிவித்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளது மாகாண நிர்வாகம்.
உலகின் கடைசி வெள்ளை ஒட்டகச் சிவிங்கி இதுதான்.. உடலில் ஜிபிஎஸ் பொருத்தியாச்சு.. ஏன் தெரியுமா?
அடிலெய்டு பகுதியில் கொரோனா
அடிலெய்டு நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து அந்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக சந்தேகிப்பதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம் தடைசெய்துள்ளது.
அமெரிக்கா நிலவரம்
அமெரிக்கா உலகத்திலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடு. ஆனால் அங்கு அனைத்து நிகழ்வுகளும் வழக்கம் போல நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு பொதுத் தேர்தலையே நடத்தியுள்ளது அமெரிக்கா. ஐரோப்பாவின் சில நாடுகளில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த பிறகு லாக்டவுனை கையில் எடுத்தன. ஆனால் தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம் இப்போதே லாக்டவுன் உத்தரவை கையில் எடுத்துள்ளது.
ஒரு நாளைக்கு ஒருவர்
ஒரு வீட்டிற்கு ஒரு நபர் மட்டுமே ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியேற முடியும், ஆனால் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே அது இருக்க வேண்டும்.
மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே இருக்கும்போதெல்லாம் முகக் கவசம் அணிய வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் அனைத்து வெளிப்புற விளையாட்டுகளும் தடை செய்யப்படும்.
அடிப்படை தேவைகள்
சூப்பர் மார்க்கெட்டுகள் போலவே, தண்ணீர், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் திறந்திருக்கும்.
பொதுப் போக்குவரத்து, மனநல உதவி உள்ளிட்ட மருத்துவ சேவைகளும் திறந்திருக்கும். அவசர ஜாமீன் விண்ணப்பங்கள் மற்றும் தலையீட்டு விஷயங்கள் தவிர அனைத்து நீதிமன்ற கட்டிடங்களும் மூடப்பட்டு வழக்குகள் அடுத்த ஆறு நாட்களுக்கு ஒத்திவைக்கப்படும்.