புகையிலைக்கு எதிராக கடும் நடவடிக்கை: டபுள்யூ.ஹெச்.ஓ. கூட்டத்தில் இந்தியா வாக்கு
திலி: புகையிலை பயன்பாட்டை குறைக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக சுகதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான கூட்டத்தில் இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது.
உலக சுதாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான உறுப்பினர் நாடுகளின் கூட்டம் கிழக்கு தைமூரின் தலைநகரான திலியில் நேற்று துவங்கியது. கூட்டத்தை தைமூரின் பிரதமர் ரூய் மரியா டீ அரூஜோ துவங்கி வைத்தார். இந்த கூட்டம் வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தென் கிழக்கு ஆசிய பகுதியைச் சேர்ந்த இந்தியா உள்பட 11 நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் புகையிலையால் ஏற்படும் கேடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த உலக நாடுகளின் அரசுகள், ஐ.நா. ஏஜென்சிகள் உள்ளிட்டவை முன்வர வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புகையில் பயன்பாட்டை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அந்த தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் மட்டும் புகையிலை பயன்பாட்டால் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் புகையிலையை பயன்படுத்தாமல் அந்த பழக்கம் உள்ளவர்களுக்கு அருகில் இருந்ததால் பலியானவர்களும் அடக்கம்.
புகையிலை பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பு, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுகிறது. வங்கதேசம், பூடான், கொரியா, இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் தைமூர் ஆகிய 11 நாடுகள் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியா பகுதியின் உறுப்பினர்களாகும்.