தென்கொரியா சென்றார் பிரதமர் மோடி... சியோலின் அமைதிக்கான பரிசை பெறுகிறார்
சியோல்: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தென் கொரியா சென்றுள்ளார். அங்கு, சியோலின் அமைதிப் பரிசு பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.
சர்வதேச ஒத்துழைப்பு, உலக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து நேற்று இரவு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி சியோல் நகருக்குப் புறப்பட்டார். தலைநகர் சியோலில் தரையிறங்கிய அவருக்கு சிகப்பு கம்பளம் அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கொரியா நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வது இது இரண்டாவது முறையாகும்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பை ஏற்று தாம் பயணிப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்குமான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று அதிபர் மூன் ஜே-இன்னை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் தென் கொரியாவில் வசிக்கும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்.
இதற்கிடையே, வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்துவதன் நோக்கமாக தென்கொரியாவுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.