தென் கொரியாவை வளைத்துப் பிடிக்கும் "மெர்ஸ்" .. பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு
சியோல்: தென் கொரியாவில் மெர்ஸ் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் சுற்றுலா சென்றுவிட்டு வந்த தென் கொரியாவுக்கு திரும்பிய 60 வயது நபரால் அந்நாட்டில் நேற்று வரை 108 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மேலும் இருவர் மரணமடைந்ததை தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 120 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர மேலும் 3800 தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நோய் பரவுவதால் அந்நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் முடங்கியுள்ளதுடன், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் வெகுவாக சரிந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அந்நாட்டில் உள்ள 2600 பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. எனினும் அரசு எடுத்துள்ள தீவிர நடவடிக்கையின் காரணமாக இந்நோய் பரவாமல் முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்த நில நாட்களில் இதன் உண்மை நிலை புரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுவதுடன் வர்த்தகமும் வழக்கம் போல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.