கொரோனாவை வென்று இயல்பு நிலைக்கு திரும்பியது தென்கொரியா.. மாஸ் டெஸ்டிங்கிற்கு கிடைத்த பெரும் வெற்றி
சியோல்: வாடிக்கையாளர்கள் நிறைந்து காணப்படும் கஃபேக்கள், சூரிய ஒளியுடன் மக்களும் நிறைந்து காணப்படும் பூங்காக்கள், சீனாவிற்கு வெளியே மீண்டும் திறக்கப்பட்ட முதல் ஆப்பிள் கடை ஆகியவை தான் பல தென் கொரியர்கள் அதிகம் செல்லும் இடமாக உள்ளது. ஆனால் கிட்டத்தட்ட அனைவருமே முகமூடிகள் அணிந்திருந்தனர். பல மாதங்களாக சுய தனிமைப்படுத்தலில் இருந்த தென்கொரியர்கள் இப்போது வெளியே வந்துள்ளார்கள்.
Recommended Video
தென்கொரியா இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மற்ற நாடுகளுடன் தென்கொரியாவை ஒப்பிட்டால் அரசாங்கங்கள் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கவைக்க பெருமளவில் லாக்டவுன் செய்கின்றன. அல்லது சமூகக் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஆனால் தென்கொரியா கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டது
ஆரம்பத்தில் உலகளவில் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக இருந்தது ஆனால் மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் பரிசோதனை செய்தது தென் கொரியா. இதனால் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் அந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. வணிகங்களை மூடவில்லை, பயணத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த தடையும் அங்கு விதிக்கப்படவில்லை.
தொடர்பு தடமறிதல்
தென் கொரியா கொரோனாவை தடுக்க ஒரே நாளில் பல்லாயிரம் பேருக்கு சோதனையை தீவிரப்படுத்தியது. அத்துடன் தொடர்பு-தடமறிதல் பிரச்சாரத்தையும் தீவிரமாக செய்தது. இதுவே அங்கு கொரோனா பரவலை கணிசமாகக் குறைத்தது. இந்த நடவடிக்கையே அந்நாட்டில் பல வணிகங்களையும் தொழிற்சாலைகளையும் திறந்து வைக்க காரணமாக இருந்தது.
பாதிப்பு குறைவு
தென்கொரியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 18 ஆக குறைந்தது, இது பிப்ரவரி பிற்பகுதியில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து மிகக் குறைவானது. அப்போது தென்கொரியாவில் தினமும் 900 க்கும் அதிகமாக இருந்தது. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இரண்டும் தங்களது முதல் வைரஸ் பாதிப்பை ஒரே நேரத்தில் உறுதி செய்திருந்தாலும், அமெரிக்காவில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 700,000 க்கும் அதிகமாகிவிட்டது, அதே நேரத்தில் தென் கொரியா கடந்த மாதம் கொரோனா கட்டுப்படுத்தியது. பரவலையும் 10,000 க்குள் குறைத்தது.
தனிமைப்படுத்துதல்
இதற்கு காரணம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று பல மாதங்களாக சுய தனிமைப்படுத்தலில் தென்கொரியர்கள் இருந்தது ஒரு காரணம். இந்நிலையில் சனிக்கிழமையன்று முதல்முறையாக வீடுகளை விட்டு தென்கொரியர்கள் வெளியே வந்தனர். தங்கள் நாட்டில் தொற்றுநோயின் மோசமான நிலை முடிந்துவிட்டதாக அவர்கள் நம்புகிறார்கள்.
உணவகம் திறப்பு
சியோலின் மிகவும் பிஸியான கரோசு-கில் சாலையில் உள்ள உணவகத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த 28 வயதான கிம் ஜி-ஹூனிடம் வீட்டை விட்டு வெளியே வந்தது குறித்து கேட்ட போது, "எனது காதலியுடன் இருக்க வேண்டிய இந்த ஒரு நாளுக்காக நான் பல நாட்களுக்கு பிறகு முதல் முறையாக வெளியே வந்தேன். புதிய தொற்றுநோய்கள் இருப்பதால் நான் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை, ஆனால் மெதுவான வேகத்துடன் கொரோனா தொற்று நாட்டை விட்டு வெளியே செல்வதில் எனக்கு அதிக ஆறுதல் இருக்கிறது.
வாகனங்கள் நிரம்பின
சியோலின் பான்போ மாவட்டத்தில் உள்ள ஹான் ரிவர் பூங்காவில் பல குடும்பங்களை பார்க்க முடிந்தது. முகமூடிகள் அணிந்த குழந்தைகள் சுற்றி ஓடுகிறார்கள். குடும்பங்கள் சந்தோஷமாக கொண்டாடினர். வாகன நிறுத்துமிடம் நிரம்பியிருந்தது. பூங்காவுக்கு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வந்த ஷின் போ-ராம் கூறுகையில், "நான் இந்த பூங்காவின் முன்னால் வசிக்கிறேன், ஆனால் இங்கு வருவதைத் தவிர்த்து வந்தேன். பின்னர் இன்றுதான் சரியான சூழல் அமைந்ததால் வந்துள்ளேன் . இன்றுதான் நீண்ட நாள்களுக்கு பிறகு இங்கே ஒரு கூட்டத்தைக் காண்கிறேன், நிறைய பேர் என்னை போல் உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.
நாடாளுமன்ற தேர்தல்
வைரஸின் கட்டுப்பாட்டைப் பற்றிய பொதுமக்களிடம் இப்படி ஒருபுதிய நம்பிக்கை பிறக்க புதன்கிழமை வெளியான நாடாளுமன்றத் தேர்தல் முடிவு ஓரளவுக்கு ஊக்கமளித்திருக்கலாம். தொற்றுநோய்களுக்கு இடையே நடந்த தேர்தல் ஆகும். அதிபர் மூன் ஜெய்-இன் தலைமையிலான ஆளும் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
சமூக இடைவெளி கடைபிடிப்பு
தென்கொரியா நாட்டில் ஆப்பிள் நிறுவனம் தனது கடையை மீண்டும் திறந்தது. சீனாவிற்கு வெளியே ஆப்பிள் நிறுவனத்தின் கடைகள் திறக்கப்பட்ட இடம் தென்கொரியா ஆகும். நாட்டிலுள்ள பல உணவகங்கள் மற்றும் கடைகளைப் போலவே, ஆப்பிள் வாடிக்கையாளர்களும் முகமூடி அணிந்துதான் வர வேண்டும் இரண்டு மீட்டர் அல்லது ஆறு அடி இடைவெளியில் வரிசையில் காத்திருக்க வேண்டும் மற்றும் நுழைவதற்கு முன்பு அவற்றின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்னதான் மீண்டு விட்டதாக தென்கொரியர்கள் நினைத்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் உள்ளது. அதனால் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்கிறார்கள்.