தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. கொட்டும் மழையில் தென்கொரியாவில் தமிழர்கள் போராட்டம்
தென் கொரிய தமிழர்கள் தமிழர்களுக்காக கொட்டும் மழை என்றும் பாராமல் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
தென் கொரியா: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தென் கொரியாவில் உள்ள தமிழர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுப்படுவதாகவும், விவசாயம் செழிக்காத நிலை இருப்பதாகவும், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் புற்றுநோய், மூச்சுதிணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
எனவே இந்த ஆலையை மூட வேண்டும் என்று குமரெட்டியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அப்போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பேரணியாக சென்று தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர்.
துப்பாக்கிச் சூடு
அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் அதையும் மீறி மக்கள் முன்னோக்கி சென்று அங்கு ஆட்சியரகத்தில் கலவரத்தை உண்டு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தென் கொரிய போராட்டம்
இது தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் போராட்டங்களை நடத்தினர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
கொரிய ஆணையம்
துப்பாக்கிச் சூட்டில் உண்மையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன? இறந்த மக்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டது? என எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மத்திய மாநில அரசுகள் தெளிவாக உறுதி செய்யவில்லை என கூறிய தென்கொரிய வாழ் தமிழர்கள், கொரிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு ஆபத்து
தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள போசிங்கக் எனும் இடத்தில் இந்த போராட்டத்தில் தமிழகத்தில் தற்பொழுது திட்டமிட்டுள்ள சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை இயற்கைக்கும், விவசாயிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்தால் அந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
கொட்டும் மழையில்...
இந்தப் போராட்டத்தில் தென்கொரியாவின் சியோல், சுவோன், பியோங்டேக், சின்ச்சாங், ஜோங்காக் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் பெண்கள், குழந்தைகள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தென்கொரியாவில் தற்பொழுது கன மழை பெய்து வரும் நிலையில் கொட்டும் மழையிலும் குடையுடன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.