ராணுவத்தினரைக் கொன்று அவர்களது ரத்தத்தை மக்களிடம் குடிக்கச் சொல்லும் தெற்கு சூடான் தீவிரவாதிகள்
ஜுமா: தெற்கு சூடான் நாட்டில் புரட்சிப்படையினர் ராணுவத்தினரை கொன்று அவர்களுடைய ரத்தத்தை அப்பாவி பொது மக்களை குடிக்க வைத்துள்ள கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சூடானில் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையே கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில், புரட்சிப்படையின் தலைவர் ரீக் மச்சார் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக, கூறி அதிபர் சால்வா கீர் குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மூண்ட உள்நாட்டுச் போரின் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சுமார் 20 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். பாதுகாப்பு முகாம்களில் 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அரசுக்கும், புரட்சிபடைக்கும் இடையே, அமைதியை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆப்பிரிக்க யூனியன் சார்பில் அங்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புரட்சிப்படையினரும், ராணுவ படையினரும் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினருமே பெண்களை கடத்தி கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் தங்கள் எதிரிகளை கொன்று அவர்களுடைய ரத்தத்தை பொதுமக்களை வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளனர். மேலும் கொல்லப்பட்டவர்களை எறியும் தீயில் சுட்டு அவர்களுடைய இறைச்சியை மக்களை கட்டாயப்படுத்தி சாப்பிட செய்துள்ளனர். இது போன்று மிக கொடூரமாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.