தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்: 39 லட்சம் மக்கள் பாதிப்பு
ஜூபோ: தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுமார் 39 லட்சம் மக்கள் பசியில் வாடி வருவதாகத் தெரிவித்துள்ள ஐநா அதிகாரிகள், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவானது தெற்கு சூடான். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துணை அதிபர் ரேக் மாச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. வன்முறையில் 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தெற்கு சூடான் நாட்டில் சுமார் 80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 39 லட்சம் மக்கள் பசியில் வாடி வருவதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால், சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த நிதி ஒதுக்கீட்டை துரிதமாக வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சூடானில் இருந்து பிரிந்து 3 வருடமே ஆகிறது. ஆகவே எண்ணெய் வளம் மிக்க நாடான தெற்கு சூடான், அதன் வளர்ச்சியை மேம்படுத்த முயலாமல் இருக்கிறது. அங்கு நிகழும் வன்முறையால் நாட்டின்பொருளாதாரம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு சூடானின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆட்சி அமையாததே மக்களின் இந்த பரிதாப நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.