விண்ணிலிருந்து மண்ணுக்கு பத்திரமாக வந்து சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள்.. இத்தாலி வீராங்கனை சாதனை!
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த மூன்று விண்வெளி வீரர்களும் பத்திரமாக பூமி திரும்பினர். அவர்களது விண்கலம் கஜகஸ்தான் நாட்டில் தரையிறங்கியது
விண்வெளி குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி நிலையத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்டன் ஸ்கேப்லெரோவ், இத்தாலியைச் சேர்ந்த வீராங்கனை சமந்தா கிறிஸ்டோஃபோரெடி, அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி விர்ட்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
பயணம் ஒத்திவைப்பு...
இந்த வீரர்கள் கடந்த மாதம் பூமி திரும்புவதாக இருந்தது. ஆனால், சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டு சென்ற ரஷ்ய விண்கலம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எரிந்து சாம்பலானது. இதனால் விண்வெளி வீரர்களின் பூமி திரும்பும் பயணம் ஒருமாதம் ஒத்தி வைக்கப் பட்டது.
தரையிறங்கினர்...
ஒரு மாத காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று விண்வெளி வீரர்களும் பத்திரமாக கஜகஸ்தான் வந்திறங்கினர். விண்வெளி வீரர்கள் மூவரும் பத்திரமாக பூமி திரும்பிய தகவலை அதிகாரப்பூர்வமாக ரஷ்ய விண்வெளிக் கட்டுபாட்டு மையம் அறிவித்துள்ளது.
சமந்தா சாதனை...
இந்த மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் 199 நாட்கள் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் மூலம் விண்வெளியில் அதிக நாள் தங்கிய பெண் என்ற பெருமை சமந்தாவுக்கு கிடைத்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்...
இதற்கு முன்பு நாசாவின் சுனிதா வில்லியம்ஸ் 195 நாட்கள்விண்வெளியில் இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதை சமந்தா தாண்டியுள்ளார்.