கிறிஸ்துமஸ்: ஸ்பெயினில் ரூ. 19,000 கோடி பரிசு தரும் லாட்டரி... முதல் பரிசு ரூ. 3 கோடி!
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி உலகிலயே மிக அதிக அளவிலான பரிசுத் தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ளது ‘எல்கோர்டோ' என்ற நிறுவனம். இது கிறிஸ்துமஸ் விழாவையொட்டி உலகில் மிக அதிகமான பரிசை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளது.
இந்த லாட்டரி சீட்டுக்களின் மொத்தப் பரிசுத் தொகை 220 கோடி யூரோ. இது இந்திய மதிப்பில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும். இதில் முதல் பரிசு மட்டும் சுமார் ரூ.3 கோடியே 20 லட்சம். இதுதவிர ஆயிரக்கணக்கான இதர பல பரிசுகளும் உள்ளது.
முதல் பரிசுக்குரிய லாட்டரி சீட்டை விற்ற கடையின் உரிமையாளர் ராக்வெல் கூறும்போது, ‘‘இதனை என்னால் நம்ப முடியவில்லை. இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. உணர்ச்சிமயமான நேரம் இது'' எனத் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு பெரிய தொகை பரிசாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த லாட்டரி சீட்டு விற்பனை செய்யப் பட்டுள்ளதாக லாட்டரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.