55 வயதை கடந்தவர்கள்... தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம்.. ஸ்பெயின் உத்தரவு
மாட்ரிட்: 55 வயதைக் கடந்தவர்கள் அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என ஸ்பெயின் அரசு தடை விதித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பிரிட்டன், அமெரிக்க, பிரேசில் போன்ற நாடுகளில் வைரசின் தாக்கம் கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி வழங்கும் பணிகளைத் தொடங்கிவிட்டன.
அஸ்ட்ரா ஜெனகா
ஸ்பெயின் நாட்டில் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களும் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா உருவாக்கிய கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 55 வயதைக் கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை அளிக்க வேண்டாம் என ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது.
55 வயதைக் கடந்தவர்களுக்கு வேண்டாம்
இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுச் சுகாதார கமிஷன் சார்பில் கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரசுக்கு எதிராக அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி எடுத்துக்கொள்ள அதிகபட்சமாக 55 வயதுடையவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவரை வெளியான ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொடரும் கட்டுப்பாடு
ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து வயதினருக்கும் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை வழங்கலாம் என்று அனுமதித்துள்ள நிலையில், ஸ்பெயின் அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த வாரம் 65 வயதைக் கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை வழங்க வேண்டாம் என்று ஜெர்மனி உத்தரவிட்டிருந்தது. இதேபோல ஆஸ்திரியா, பெல்ஜிம், நெதர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசிக்கு வயது கட்டுப்பாடு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
கொரோனா பாதிப்பு
கொரோனா காரணமாக ஐரோப்பாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது. அந்நாட்டில் நேற்று மட்டும் ஒரே நாளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு அந்நாட்டில் 29.71 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 584 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பும் 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது,
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்நாடு விரைவாக மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை 20 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்பெயினில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாட்டிலுள்ள 70% பேருக்குத் தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கரோலினா டாரியாஸ் தெரிவித்துள்ளார்.