ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி
ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா மரணடைந்தார்
மாட்ரிட்: கொரோனாவைரஸ் முதல் முறையாக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பலி எடுத்துள்ளது. பாதிப்புக்குள்ளான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா மரணமடைந்தார்.
Recommended Video
மரணமடைந்த மரியா தெரசாவுக்கு வயது 86 ஆகும். மார்ச் 26ம் தேதி அவருக்கு கொரோனாவைரஸ் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.
அவரது மரணத்தை அவரது சகோதரர் இளவரசர் சிக்ஸ்டோ என்ரிக் டி பார்போன் முகநூலில் உறுதிப்படுத்தியுள்ளார். உலக அளவில் கொரோனாவைரஸுக்குப் பலியான முதல் ராஜ குடும்ப உறுப்பினர் மரியா தெரசாதான்.
அவரது இறுதிச் சடங்குகள் மாட்ரிட் நகரில் வெள்ளிக்கிழமையே நடந்து முடிந்து விட்டது. 1933ம் ஆண்டு பாரீஸில் பிறந்தவர் இளவரசி மரியா தெரசா. பிரான்சில் படிப்பை முடித்தவர். பாரீஸில் உள்ள சோர்போரன் கல்லூரியில் பணியாற்றியுள்ளார். இவருக்கு சிவப்பு இளவரசி என்ற பெயரும் உண்டு. காரணம் இவர் மனதில் பட்டதை பளிச்சென பேசி விடுவார். எது சரியோ சரியென்பார், தவறு என்றால் தவறுதான். கம்யூனிசவாதி போல நடந்து கொள்வதால் இவருக்கு சிவப்புஇளவரசி என்ற பெயர் வந்ததாம்.
இத்தாலியைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் கொரோனாவைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 3400 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். சீனாவைத் தாண்டி விட்டது ஸ்பெயின். தொடர்ந்து அந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டமும் தொடர்கிறது.