பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் இன்று இந்தியா வருகிறார் சோட்டா ராஜன்!
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் கைதான சோட்டா ராஜன் இன்று இரவு இந்தியா அழைத்துவரப்படுகிறார். பாதுகாப்பு காரணங்களால் சோட்டா ராஜனை அழைத்துவர குண்டு துளைக்காத கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொலை, மிரட்டல், போதை மருந்து கடத்தல் என 70க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பாக, இந்தியாவால் தேடப்பட்டுவரும் நிழலுலக தாதா சோட்டா ராஜன், ஒரு வாரம் முன்பு, இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அது முதல் அங்குள்ள கைதிகள் கூடத்தில் சோட்டா ராஜன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க இந்தோனேஷியா சம்மதித்தது. இதையடுத்து பாலி தீவில் இருந்து இன்று மும்பைக்கு விமானத்தில் ராஜன் அனுப்பி வைக்கப்படுகிறார். இன்று இரவு மும்பை வந்து சேருகிறார் ராஜன். இதற்காக சிறப்பு விமானத்தை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
பாலி விமான நிலையத்திற்கு ராஜன், குண்டு துளைக்காத காரில் அனுப்பி வைக்கப்பட்டார். அவரது காரை சுற்றிலும் அதிரடிப்படை வாகனங்கள் அணிவகுத்து சென்றதை பார்க்க முடிந்தது. தாவூத் கோஷ்டியால் ராஜனுக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மும்பையிலும், ராஜனுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.