இந்திய கோரிக்கைகளுக்கு ரஷ்யா ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு அளித்தது.. மாஸ்கோவில் ராஜ்நாத்சிங் பேட்டி
மாஸ்கோ: இந்திய தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரஷ்ய தரப்பு ஆக்கப்பூர்வமாக பதிலளித்தது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் ரஷ்யா பெற்ற வெற்றியின் 75 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் தலைநகர் மாஸ்கோவில் வெற்றி விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று, மாஸ்கோ புறப்பட்டு சென்றார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு மத்திய அமைச்சர் ஒருவர் வெளிநாடு பயணம் மேற்கொண்டது இதுதான் முதல்முறை. ஏனெனில் பிப்ரவரி 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை ரியாத்தில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
அதற்கு பிறகு இந்திய தரப்பில் இருந்து வெளிநாடு சென்ற முதல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்தான். மேலும் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைகளை சேர்ந்த 75 வீரர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர்.
மாஸ்கோவில் ராஜ்நாத், சீன, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுடன் பேசும் ஜெய்சங்கர்.. செம்ம திருப்பம்
ராஜ்நாத்சிங் மரியாதை
இந்த நிலையில் இன்று, ராஜ்நாத்சிங், மாஸ்கோவிலுள்ள, இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள உள்ள மகாத்மா காந்தி சிலையில் மலர்களை வைத்து மரியாதை செலுத்தினார். ரஷ்யத் துணைப் பிரதமரையும், ராஜ்நாத்சிங் இன்று சந்தித்தார். இதன்பிறகு நிருபர்களை ராஜ்நாத்சிங் சந்தித்து பேட்டியளித்தார்.
இந்திய வீரர்கள்
ராஜ்நாத்சிங் கூறியதாவது: இரண்டாவது உலகப் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். பல லட்சம், இந்திய வீரர்களும் இந்த போரில் பங்கேற்றனர். இந்தியாவுக்கும் பல்வேறு இழப்புகள், இந்தப் போரின் போது ஏற்பட்டன.
சிறப்பான உறவு
கொரோனா வைரஸ் பாதிப்பு பரவலுக்கு பிறகு இந்திய தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்னுடையதுதான். இதிலிருந்து இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு உறவு அனைவருக்கும் புரிந்திருக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேர்மறையாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்தது.
Recommended Video
ஒப்பந்தங்கள்
ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அப்படியே தொடருவதோடு மட்டுமல்லாமல் அதை விரைவாக முடித்து நடைமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இந்திய தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரஷ்ய தரப்பு ஆக்கப்பூர்வமாக பதிலளித்தது. இந்த பேச்சுவார்த்தை முழுக்க திருப்திகரமாக இருந்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ரஷ்யாவுடன் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தங்கள் செய்துள்ளன. அதை விரைவுபடுத்துவது பற்றிதான் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
சீனாவுடன் இந்தியாவுக்கு மோதல் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்ய பயணத்தில், அதுகுறித்து ஆலோசிக்கப்படலாம், பின்னர், ராஜ்நாத்சிங் முக்கியமான அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீன விவகாரம் தொடர்பாக எந்த ஒரு வார்த்தையையும் தனது பேட்டியின்போது, ராஜ்நாத்சிங் குறிப்பிடவில்லை.