”எங்களுக்கு கொண்டாட்டங்கள் வேண்டாமே ப்ளீஸ்” - தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள பாரிஸ்!
பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களை ஒட்டி இந்த வருடம் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெருமளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படவில்லை.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் வெகு விமரிசையாக நடைபெறும். வாண வேடிக்கை, கேளிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறும். இதில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் நாட்டில் குவிவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது.
சமீபத்தில் இங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த சோகம் இன்னும் பிரான்ஸ் மக்களை விட்டு விலகவில்லை. இதனால் அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் மற்றும் புத்தாடை வாங்குவது மிக குறைவாக உள்ளது. இதனால் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சீசனில் சில நாட்களுக்கு முன்பே ஹோட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழியும். ஆனால், இப்போது பல ஹோட்டல்களில் அறைகள் காலியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.