விசா விதிமுறையை மாற்றினால் அமெரிக்காவுக்குதான் இழப்பு.. எச்சரிக்கும் தனியார் நிறுவனங்கள்
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கை துணையும் பணிபுரிவதை அங்கீகரிக்கும் வகையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியில் அளிக்கப்பட்ட சலுகையை ரத்து செய்வதற்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பரிசீலிக்கும் செய்தி இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டினர், அமெரிக்காவுக்கு பணி நிமித்தமாக செல்வதற்கு ஹெச்1-1பி விசாக்களை அந்நாடு வழங்குகிறது.
இந்த விசா வைத்துள்ளோர் கணவன் அல்லது மனைவி ஆகிய வாழ்க்கை துணையும் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான நடைமுறையை எளிமைபடுத்தினார் முன்னாள் அதிபர் ஒபாமா.
ஒபாமா சலுகை
ஒபாமா ஆட்சியின்போது கடந்த 2015ம் ஆண்டில் இதற்கான சலுகை வழங்கப்பட்டது. ஒபாமா அரசு கொண்டு வந்த விதிமுறைகள்படி, ஹெச்-4 சார்பு விசாவின்கீழ், ஹெச்-1பி விசா வைத்துள்ளோரின் வாழ்க்கை துணைகளும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கென சில விதிமுறைகள் உள்ளன.
பலரும் பணியாற்றுகிறார்கள்
இப்படியான ஹெச்-4 அமெரிக்காவில் கடந்த வருடத்தில் சுமார் 41 ஆயிரம் ஹெச்-4 விசாதாரர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஜூன் மாதம் வரை சுமார் 36 ஆயிரம் ஹெச்-4 விசாதாரர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் அரசு
இப்படி பணியாற்றுவதில் பெரும்பாலானோர், இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ட்ரம்ப் அரசு தனது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அமெரிக்கப் பணியாளர்களை பாதுகாக்கிறோம் எனக் கூறிக்கொண்டு ஹெச்-1பி விசா வழங்குதலில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது அந்த அரசு.
தம்பதிகள் இணைந்து பணியாற்ற முடியாது
இந்த சலுகையை ரத்து செய்வது குறித்தும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சலுகை ரத்து செய்யப்பட்டால், ஹெச்-1பி விசாதாரர்களின் மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ அமெரிக்காவில் பணி கிடைப்பது மிக கடினமானதாகிவிடும் என்பதால், அந்த பணியாளர்கள் தொடர்ந்து அங்கேயே வேலை பார்க்காமல் குடும்பத்தோடு இணைய விரும்புவார்கள்.
பேஸ்புக், லிக்டின் விவாதங்கள்
இதன் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது நாட்டுக்கு வருவதை குறைக்க முடியும் என்று டிரம்ப் நிர்வாகம் கருதுகிறதாம். இதுகுறித்த வாத விவாதங்கள், பேஸ்புக், லிங்டின் உள்ளிட்ட பல்வேறு சமூக தளங்களில் நடந்து வருகின்றன. அமெரிக்கர்களிலேயே கணிசமானோர், ட்ரம்ப் அரசு நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.
திறமைசாலிகள் தேவை
யுனைட்ஜிபிஎஸ் நிறுவன சி.இ.ஓ கிறிஸ்டோபர் பன்னெல் கூறுகையில், திறமையாளர்களை அமெரிக்கா இழக்கத்தான் இந்த திட்டம் உதவும் என்கிறார். உலகிலுள்ள பல திறமைசாலிகள் அமெரிக்காவுக்கு வருகை தந்ததால்தான் அமெரிக்கா, பொருளாதாரத்திலும், அறிவியலிலும் மேம்பட்டது. அதை இழந்தால் அமெரிக்கா அதல பாதாளத்திற்கு செல்லும் என்கிறார்கள் சில நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள்.