குட் நியூஸ்... அதிக பலன் தரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி... இந்த மாதமே இந்தியாவில் கிடைக்கும்
மாஸ்கோ: இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விநியோகம் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடெஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற சில மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் கூறியிருந்தன.
கொரோனா அதிவேகம்: தமிழகத்தில் 8,000-ஐ கடந்த தினசரி பாதிப்பு.. சிறுவர்களை குறிவைக்கும் வைரஸ்!
இந்தியாவில் ஸ்புட்னிக் வி
இந்நிலையில், இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்குக் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷ்யா ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல நாடுகள் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவுக்கு வர காலதாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.
இம்மாத இறுதியில் கிடைக்கும்
இது குறித்து ரஷ்யாவுக்கான இந்தியா தூதர் பால வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான முதல் தொகுப்பு அனுப்பப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் உற்பத்தியும் வரும் மே மாதம் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய இதுவரை 5 இந்திய நிறுவனங்களுடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உற்பத்தி எவ்வளவு
முதலில் குறைந்தளவு தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டாலும் அந்த எண்ணிக்கை மெல்ல அதிகரிக்கப்படும் என்றும் இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 5 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் சுமார் 50% தடுப்பூசி இந்தியர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் தடுப்பாற்றல் 91.6% ஆகும். உலர்ந்த வடிவத்தில் அதை 2 முதல் 8 டிகிரியில்கூட சேமிக்கலாம். அதாவது சாதாரண ப்ரிட்ஜிலேயே ஸ்புட்னிக் வி தடுப்பூசியைச் சேமிக்க முடியும். மேலும், பைசர், மாடர்னா தடுப்பூசிகளைக் காட்டிலும் விலையும் குறைவு என்பதால் வளரும் நாடுகளும் ஏழ்மை நிலையுள்ள நாடுகளும் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.