கொழும்பு துறைமுகத்தில் கப்பலை நிறுத்துவோம்... கடனைக் காட்டி இலங்கையை மிரட்டும் சீனா!
பீஜிங்: கொழும்பு துறைமுகத்தில் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்துவோம். அதற்கு முந்தைய ராஜபக்சே அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளோம் என்று சீனா கூறியுள்ளது.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அதனால் இலங்கையில் சீனா பெருமளவு முதலீடு செய்தது. கடன்களையும் கொடுத்து வந்தது. இந்த நிலையில் அங்கு ஆட்சி மாறி விட்டது. மைத்ரிபால சிறிசேன புதிய அதிபராகியுள்ளார். அவர், ராஜபக்சே காலத்தில் சீனாவுடன் போடப்பட்ட முதலீட்டு திட்டங்களை மறுஆய்வு செய்து வருகிறார்.
மேலும் கடந்த ஆண்டு ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சீனாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அவற்றில் ஒரு கப்பல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகும். சமீபத்தில் சீனாவுக்கு சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா இதுபற்றி கவலை தெரிவித்தார். எதிர்காலத்தில் சீன கப்பல்கள் நிறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். மேலும் இலங்கைக்கு அதிக வட்டியில் சீனா கொடுத்த ரூபாய் 31 ஆயிரம் கோடி கடன் பற்றியும் அவர் கவலை தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்விங் நேற்று பதில் அளித்தார். அவர், "சீனா நீர்மூழ்கி கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு முந்தைய இலங்கை அரசிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்றுள்ளோம்.
ஏடன் வளைகுடாவில் சோமாலியா நாட்டு கடல் பகுதியில் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக இலங்கை வழியாக சீன நீர்மூழ்கி கப்பல்கள் செல்கின்றன. அப்படி செல்லும்போது எரிபொருள் மற்றும் உணவு பொருள் தேவைக்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்படுவது வழக்கம்.
இது வழக்கமான ஒளிவுமறைவற்ற செயல்பாடுதான். சர்வதேச நடைமுறைகளைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். நாங்கள் அறிந்தவரை இலங்கையும் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கையை ஆதரிக்கிறது. நட்பு நாடுகளின் நீர்மூழ்கி கப்பல்கள் நிறுத்தப்படுவதை இலங்கை வரவேற்பதாகவே கருதுகிறோம்.
இலங்கைக்கு கொடுத்த கடனைப் பொறுத்தவரை முந்தைய இலங்கை அரசின் வேண்டுகோளின் பேரில்தான் கடன் கொடுத்தோம். இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை அடிப்படையில் கடன் அளிக்கப்பட்டது. அந்த கடன் இலங்கை மற்றும் அதன் மக்களின் நலன்களை பூர்த்தி செய்வதாக உள்ளது. இலங்கையின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பேருதவி புரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கடன் தொகையைக் காரணமாக வைத்து இலங்கையை நிர்ப்பந்திக்க சீனா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.