போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இலங்கை கடும் எதிர்ப்பு!
ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மானத்துக்கு இலங்கை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தை ஒட்டி அமெரிக்கா நடத்திய அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க கூறியதாவது:
அமெரிக்கா தயாரித்திருக்கும் வரைவு தீர்மானமானது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்கவில்லை.
ஏற்கனவே கூறிய விவகாரங்களைத்தான் மீண்டும் மீண்டும் கூறுகிறது. அத்துடன் எங்கள் மீது ஒரு தீர்ப்பை திணிக்கும் வகையிலும், பரிந்துரைக்கிறது.
இந்த தீர்மானத்தின் பல பத்திகள் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கிறது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை குற்றவியல் விசாரணை அல்ல, மனித உரிமை விசாரணை என்றும் கூறப்பட்டாலும், குற்றவியல் நீதி அம்சங்களை முன்வைப்பது ஏற்புடையது அல்ல.
ஜனவரி மாதம் 8ஆம் நாள் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை பின்பற்றிவரும் புதிய அணுகுமுறையின் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
எமது அரசாங்கம் சகல மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சுயவிருப்பத்தின் பேரில் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இவ்வாறு ரவிநாத ஆரியசிங்க கூறினார்.