இலங்கை போர்க்குற்றம்: சர்வதேச குழு விசாரிக்க சீனா உள்பட 22 நாடுகள் எதிர்ப்பு
நியூயார்க்: இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை குழு விசாரணை நடத்த சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொடுமைப்படுத்தி, கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்தது.
இதையடுத்து இலங்கையின் போர்க்குற்றம் குறித்து அந்நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் 3 ஆண்டுகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவர் நவி பிள்ளை இலங்கை சென்று அங்கு நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையும் அளித்தார். அந்த அறிக்கையை ஏற்று இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
எங்கள் அரசே போர்க்குற்றம் குறித்து விசாரிக்கும். அதனால் சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்று ராஜபக்சே தெரிவித்தார். இந்நிலையில் தான் பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி ஆட்டிசாரி (77), நியூசிலாந்து நாட்டின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் (70), பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமை கமிஷன் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் (62) ஆகியோர் கொண்ட 3 நபர் விசாரணை குழுவை ஐ.நா. கடந்த ஜூன் மாதம் 25ம் அமைத்தது.
இந்த சர்வதேச குழு இலங்கை சென்று விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டதற்கு ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச குழு விசாரணை நடத்த சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, அல்ஜீரியா, அங்கோலா, வங்கதேசம், பெலாரஸ், பொலிவியா, கியூபா, ஈக்வடார், இந்தோனேசியா, ஈரான், வட கொரியா, மியான்மர், நிகரகுவா, தெற்கு சூடான், உகாண்டா, சூடான், வெனிசுலா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.