இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா.வில் இன்று தாக்கல்!
ஜெனீவா: சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது அமர்வு கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு மீதான போர்க் குற்ற விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் இதற்கு முன்பு மூன்று முறை அமெரிக்கா தீர்மானங்களைக் கொண்டுவந்தது. அந்த தீர்மானங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றன.
2012, 2013ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரித்த இந்தியா கடந்த ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது அமர்வுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் இலங்கை அரசு மீதான போர்க் குற்ற புகார் குறித்து ஐ.நாவின் 3 நபர் குழு நடத்திய விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று கூறி வந்த அமெரிக்கா, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இது இன அழிப்பு கிடையாது, மனித உரிமை மீறல்தான் என்பதால் உள்நாட்டு விசாரணையே போதுமானது என்று தெரிவித்துள்ளது. இது குறித்த தீர்மானத்தையும், இந்தக் கூட்டத்தில் அந்த நாடு கொண்டு வர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தங்கள் நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்குமாறு இந்தியாவைக் கேட்டுக்கொள்ளவே இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லி வர உள்ளதாகக் கூறப்படுகிறது.