கர்நாடக இசையில் பிற மத பாடல்கள் பாட எதிர்ப்பு.. அமெரிக்க கோயிலில் டி.எம்.கிருஷ்ணா கச்சேரி ரத்து
வாஷிங்டன்: இஸ்லாம், கிறிஸ்தவ மத கடவுள்கள் குறித்தும் கர்நாடக இசையில் பாடல்கள் பாடுவேன் என்று தெரிவித்திருந்த கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவின் இசைக் கச்சேரியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற இந்துக் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
வயலின் இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண் 'இயேசுவின் சங்கம சங்கீதம்' என்ற பெயரில் இவ்வார இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்த, கர்நாடக இசை நிகழ்ச்சிக்கு வலதுசாரி அமைப்புகளிடம் இருந்து வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ரத்து செய்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக இசை பாடகரும், மகசாசே விருது பெற்றவருமான, டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசை என்பதை மேல் வகுப்பு இந்துக்களுக்கான ஒரு இசை என்ற அளவில் மட்டுமே வைத்திருக்க முயற்சி நடைபெறுகிறது. கர்நாடக இசை பல தளங்களில் விரிவடைய வேண்டும். கிறிஸ்தவ மற்றும் அல்லா தொடர்பாக ஒவ்வொரு மாதமும் கர்நாடக இசையில் பாடல்களை வெளியிட தயாராக உள்ளேன், என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியிலுள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில், வரும் செப்டம்பர் 9ம் தேதி டி.எம்.கிருஷ்ணா கச்சேரி நடத்துவதாக இருந்தது. ஆனால், அக்கோயிலில் நடத்தவிருந்த கச்சேரியை, கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக வலதுசாரி கருத்தாளர்கள் தீவிரமாக விமர்சனம் செய்துவரும் நிலையில் கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது.