ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு அமைதிச் செய்தி அனுப்பி தலையில்லா முண்டத்தைப் "பரிசாகப்" பெற்ற ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
அகர்தலா: உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு அமைதிச் செய்தி அனுப்பிய ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, பதிலுக்கு அந்த அமைப்பு தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை அனுப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர். இவர் சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அமைதிச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், ஐஎஸ் அமைப்பு தீவிரவாதத்தைக் கைவிட்டு விட்டு அமைதிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
ஆனால் அதற்குப் பதிலாக தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றின் படத்தை ரவிசங்கருக்கு அனுப்பி வைத்துள்ளது ஐஎஸ் அமைப்பு.
இது குறித்து அகர்தலாவில் செய்தியாளர்களிடம் ரவிசங்கர் கூறுகையில், "ஐஎஸ் அமைப்புடன் அமைதிப் பேச்சு நடத்த நான் முயன்றேன். இதுதொடர்பாக ஒரு செய்தியையும் அனுப்பியிருந்தேன். ஆனால் அவர்களோ பதிலுக்கு துண்டிக்கப்பட்ட தலை ஒன்றின் புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். இதனால் எனது முயற்சி முடிந்து விட்டது.
அமைதிப் பேச்சுக்கு அவர்கள் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன். எனவே அவர்களை ராணுவரீதியாக மட்டுமே அடக்க முடியும் என்று நம்புகிறேன்" என்றார் அவர்.
தனது அகர்தலா பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் தற்போது கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் ரவிசங்கர்.