இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கை... ஜெனீவா மாநாட்டில் இன்று தாக்கல்
ஜெனீவா : இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இன்று ஜெனிவா மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என அதன் தலைவர் ஜெய்ட் ராட் அல் ஹுசேன் அறிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டதை தொடங்கி வைத்துப் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையின் தகவல்கள் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அல் ஹுசேன் குறிப்பிட்டார்.
இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், அந்நாட்டில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய ஆட்சி நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் தனது பரிந்துரைகளுடன் விரிவான விசாரணை அறிக்கை இன்று அவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஜெய்ட் ராட் அல் ஹுசேன் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையின் பொறுப்பை எடுத்துரைத்தல், மீள்குடியேற்ற மற்றும் சீரமைப்பு நடவடிக்கைள் மீது தீவிர கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே போர்க் குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என்று இந்தியா வந்த அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.