இலங்கை தமிழ் எம்பி நடராஜ் ரவிராஜ் கொலை வழக்கில் கைதாகிறார் கருணா ?
இலங்கை தமிழ் எம்பி நடராஜ் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கருணா விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம்: இலங்கை தமிழ் எம்.பி. நடராஜ் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கருணா விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரியிலிருந்து எம்.பியாகதேர்ந்தெடுக்கப்பட்டவர் ரவிராஜ். தமிழர்களிடையை செல்வாக்குடன் திகழ்ந்தவர். இலங்கை அரசு மற்றும் பாதுகாப்புப் படையினர் தமிழர்கள் மீது நடத்தி வந்த அத்துமீறல்களைக் கண்டித்து குரல் கொடுத்து வந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ஆதரவானவர்.
இதனிடையே கடந்த 2006 நவம்பர் 10-ம் தேதி யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரியில் நடராஜ் ரவிராஜ் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இலங்கை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரின் உதவியும் நாடப்பட்டது.
இந்த வழக்கில் கைதான அரசுத் தரப்பு சாட்சி ஒருவர் அளித்த தகவலின் பேரில் இக்கொலையில் கருணாவுக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. நடராஜ் ரவிராஜ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேரில் இருவர், கருணாவின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இக்கொலையில் கருணாவின் தொடர்பு குறித்து சாட்சி அளித்த தகவல்களின் அடிப்படையில் விரைவில் கருணா கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் நடராஜ் ரவிராஜை கொலை செயற்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கி இராணுவத்திற்கு சொந்தமானது எனவும், அந்த துப்பாக்கி இராணுவ முகாமில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவராகவும், அந்த அமைப்பின் கிழக்கு பிராந்திய தளபதியாகவும் இருந்த கருணா பின்னர் ராஜபக்சேவின் ஆதரவாளராக மாறி, அவரது அமைச்சரவையிலும் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.