ஃபைன் கட்ட காசின்றி சிறை சென்றவர்.. அங்கேயே உயிரிழந்தார்.. சுவிஸ் நாட்டில் சோக சம்பவம்
சுவிட்சர்லாந்து நாட்டில் அபராதம் செலுத்த வழியில்லாததால், சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன விதிமீறலில் ஈடுபட்டதால் சிறை வைக்கப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த இலங்கை நபருக்கு 42 வயது இருக்கும் என சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபராதம் செலுத்த பணம் இல்லாத நிலையில், லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்புக் காவல் மையத்தில் 2 நாட்கள் அந்த இலங்கையர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே அந்த நபர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சிசிடிவி கேமராவில் அந்த நபர் உடல்நலமின்றி அவதிப்பட்டதை அதிகாரிகள் கவனித்ததாகவும், விரைந்து சென்று அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக மரணித்த இலங்கையரின் உடல் நிலையை, மருத்துவர் பரிசோதித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மருத்துவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
இந்தநிலையில் அவரது மரணத்திற்கான சரியான காரணத்தினை கண்டறியும் நோக்கில் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சுவிஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டு உயிரிழந்த இலங்கையர் செய்த குற்றம், அவரது பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் சிறைநிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.