நாளை இலங்கை சுதந்திர தினம்-கரிநாள் என யாழ். மாணவர்கள் அறிவிப்பு- உலக நாடுகளில் தமிழர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம்: இலங்கையின் 75-வது சுதந்திர தினத்தை கரிநாளாக கடைபிடிப்போம் என யாழ்ப்பாணம் மாணவர்கள் அறிவித்துள்ளனர். உலகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இலங்கை சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற உள்ளன.
இலங்கையின் சுதந்திர தின நாளை பிப்ரவரி 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இலங்கையில் பொதுவாக ஈழத் தமிழர்கள் சுதந்திர தினத்தை கரிநாள் என எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பது வழக்கம்.
தற்போது இலங்கை ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வாக 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என கூறி வருகிறார். இதற்கு சிங்கள அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தமிழர் தரப்பிலும், 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் எதுவும் பலன் இல்லை என கூறி வருகின்றன. இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே முக்கிய அறிவிப்பை ஏதேனும் வெளியிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதனிடையே யாழ்ப்பாணம் மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இலங்கையின் சுதந்திர தினத்தை நாளை கரிநாளாக கடைபிடிப்போம் என அறிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டமைப்பும் இதேபோல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தமிழ்நாடு பாஜக முன்வைக்கும் 13ஆவது சட்டத் திருத்தம் தீர்வாகுமா என்ன?
வடகிழக்கு சிவில் சமூகம் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு லட்சத்துக்கும் மேலான தமிழ் மக்களைக் கொன்றும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்களை புலம்பெயர வைத்தும் பல்லாயிரம் தமிழர்களை காணாமல் போகச் செய்தும் பல நூறு தமிழர்களை பல்லாண்டுகளாக சிறைகளில் அடைத்தும் உள்ளது சிங்கள தேசம்.அத்துடன் தமிழர்களின் தாயகத்தில் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலங்களை குடியேற்றமுட்பட பலவழிகளிலும் அபகரித்தும் தமிழர்களின் பல ஆயிரம் கோடி செல்வங்களை அழித்துமுள்ளது. இந்நிலையில் சிறீலங்காவின சுதந்திர தினம் உண்மையில் தமிழர்களின கரி நாள் என்பதே தமிழ்த் தேசத்தின் யதார்த்தமாகும். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்து நிற்கின்றோம் என தெரிவித்துள்ளது.
இதேபோல் ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நாளை இலங்கை சுதந்திர தினத்துக்கு எதிரான பல்வேறு ஒன்றுகூடல்கள் உள்ளிட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் முன்பாக இத்தகைய போராட்டங்கள் நடத்தப்படும்.
இலங்கையில் இந்திய இணை அமைச்சர் முரளிதரன்
இதனிடையே இந்திய இணை அமைச்சர் முரளிதரன் 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையின் 75 வது சுதந்திர தினவிழாவில் அவர் பங்கேற்க உள்ளார்.