வளைகுடாவில் வாடும் இந்தியர்களை விரைந்து காப்பாற்றுங்கள்: எம்.பி.க்கள் வலியுறுத்தல்
சென்னை: சவூதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வர முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்தை நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து வேலூர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. அப்துல் ரஹ்மான் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு மேலும் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் மத்திய அமைச்சர் இ. அகமது ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து அப்துல் ரஹ்மான் எம்.பி. கூறுகையில்,
சவூதி அரசு சுமார் 60,000 பேரை கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. சிறைகளில் ஏராளமான இந்தியர்கள் இருக்கிறார்கள். பல இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு உதவியபோதிலும், இன்னும் பலர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்பான்சர்களிடம் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்தவர்கள் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். இந்திய பணியாளர்கள் ஏதோ ஆட்டு மந்தைகளில் ஆடுகள் போன்று அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
மேலும் அவர் வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சக நிலைக்குழுவில் உள்ள 5 எம்.பி.க்கள் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.