கானா பல்கலை.யில் மாயமான மகாத்மா காந்தி சிலை.. தெரியாது என கைவிரிக்கும் கானா அரசு
Recommended Video
அக்ரா: 2019ம் ஆண்டில் நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டை மத்திய அரசு கொண்டாட உள்ள நிலையில் கானா நாட்டில் காந்தியின் சிலை அகற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புகழ்பெற்ற கானா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் சிலர் காந்தி சிலையை அகற்ற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடிதம் ஒன்றை அளித்திருந்தனர்.
அதில், பூர்வகுடி ஆப்ரிக்கர்களையும், மற்றவர்களையும் காந்தி தொடர்ந்து விமர்சித்து வந்ததாகவும், எனவே பல்கலைக்கழக வளாகத்தில் அவரது சிலையை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
இதையறிந்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சகமும், விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை காத்திருக்குமாறும் சம்பந்தப்பட்ட எதிர்ப்பாளர்களுக்கு பதில் ஒன்றை தெரிவித்தது.
ஆனால், அதற்குள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிலை மாயமாகி விட்டதாகவும், அந்த சிலை தற்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் கானா பல்கலைக்கழக நிர்வாகமும், வெளியுறவு அமைச்சகமும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி
வருகின்றன. வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகமும், அமைச்சகமே காரணம் என்று பல்கலைக்கழக நிர்வாகமும் பதிலளித்து வருகின்றன.
கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை, 2016ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.