இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை.. ஜேட்லி திறந்து வைத்தார்!
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திறந்து வைத்தார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்தியாவின் தேசப் பிதா மகாத்மா காந்திக்கு சிலை அமைக்கப்பட்டது. 9 அடி வெண்கல சிலையை சனிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திறந்து வைத்தார்.
இந்த சிலை திறப்பு விழாவில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, காந்தி சிலை நினைவு அறக்கட்டளை நிறுவனர் தேசாய் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காந்தி சிலையை இங்கிலாந்தின் பிரபல சிற்பி பிலிப் ஜாக்சன் வடிவமைத்தார். நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் சிலைகளுக்கு அருகே காந்தியின் சிலை கம்பீரமாக நிற்கிறது.
ஒரு நாட்டின் தலைவர் என்று எந்த பதவியையும் வகிக்காத ஒருவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் சிலை வைத்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.