100 மில்லியன் டாலரில் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வு... தொடங்கி வைத்தார் ஸ்டீவன் ஹாக்கிங்
லண்டன்: வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆராயும் 100 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டம் ஒன்றைத் துவக்கி வைத்துள்ளார் ஸ்டீபன் ஹாக்கிங்.
ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் யூரி மில்னர் (53). இவர் பேஸ்புக், டுவிட்டர்,பிளிப்கார்ட் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்களில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். யூரிக்கு ரூ.5,500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. இயற்பியல் படிப்பை விட்டு பாதியில் வெளியேறிய யூரி, ஆண்டுதோறும் தனது பெயரில் இயற்பியலுக்கான விருது ஒன்றை அளித்து வருகிறார். இந்த பரிசுத் தொகை நோபல் பரிசை விட அதிகமானது.
இந்நிலையில், இவர் தொழில்நுட்ப உதவியுடன் புதிய தேடல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
வேற்றுக்கிரகவாசிகளைத் தேடி...
அதாவது வேற்றுக்கிரகவாசிகளைத் தேடும் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய திட்டம் ஒன்றை அவர் நேற்று ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்தை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நேற்று லண்டனில் துவக்கி வைத்தார்.
மனதை அரிக்கும் கேள்வி...
தனது இந்தப் புதிய திட்டம் குறித்து யூரி கூறுகையில், "எனது இந்த முயற்சிக்கு முக்கியக் காரணம் வெகு நாட்களாக என் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி தான். அதாவது இந்த பால்வெளியில் பூமியில் வாழும் ஜீவராசிகளாக நாம் மட்டும் தான் உள்ளோமா என்பது தான். இதற்கு விடை தேடும் முயற்சியாகத் தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது' என்கிறார்.
10 ஆண்டுகால ஆராய்ச்சி...
பத்தாண்டு கால திட்டமாக இது தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெர்கிலே பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இதற்கென உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கிரீன் பேங்க் மற்றும் பார்க்ஸ் என்ற இரண்டு தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
வேகமான முடிவுகள்...
இந்த ஆய்வானது முந்தைய ஆய்வுகளை விட பல மடங்கு வேகமானதாக இருக்கும் என யூரி தெரிவித்துள்ளார்.
பறக்கும் தட்டுகள்...
வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆய்வு சர்வதேச அளவில் நடந்து வருகிறது. அவ்வப்போது வானில் சந்தேகப்படும் படியான பறக்கும் தட்டுகள் பறப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், மற்ற சில கிரகங்களில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் மனிதர்களின் உருவம் போன்ற தோற்றம் பதிவாகி இருப்பதாகவும் அவ்வப்போது இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி வேற்றுக்கிரகவாசிகள் குறித்து சந்தேகத்தை எழுப்பி வருகின்றன.
தொடரும் மர்மம்...
தொடர்ந்ந்து இது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றன. பூமிக்கு வந்த வேற்றுக்கிரகவாசிகள் என சில வினோத உருவங்களின் உடல்களும் கிடைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகைய தகவல்களுக்கு ஆம் என்றோ இல்லை என்றோ கருத்துக் கூறாமல் விஞ்ஞானிகள் மவுனம் சாதித்து வருகின்றனர்.
எதிர்பார்ப்பு...
இந்த சூழ்நிலையில், இந்தப் புதிய ஆய்வு மூலம் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரலாம் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இந்தத் திட்டத்தின் இந்திய மதிப்பு ரூ. 637 கோடி ஆகும்.