ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்பாட்டம்
சான்பிரான்சிஸ்கோ: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகிறது.
லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலும் இது போன்ற போராட்டங்கள் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 200 பேர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் படுகொலைக்கு நீதி கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில் மக்கள் கையெழுத்திட்ட மனுவை இந்திய தூதரக அதிகாரி திரு. வெங்கட் அவர்களிடம் அளிக்கப்பட்டது. மக்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு தெரிவிப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.
விடுமுறை நாளிலும் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அலுவலகம் வந்து மனுவை பெற்று கொண்டு, உடனடியாக இந்திய அரசுக்கு தெரியப்படுத்த ஆவன செய்தது பாராட்டத்தக்கது.
சிலிக்கன் வேலியை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா அவர்களும் துப்பாக்கிச்சூட்டை சர்வதேச பிரச்சனை என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.