ஸ்மித், வார்னருக்கு வாழ்நாள் தடை.. ஆஸி. கிரிக்கெட் வாரியம் திட்டம்.. பரபரப்பில் ரசிகர்கள்
Recommended Video
கான்பெரா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டனான டேவிட் வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸி. வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது காமிராவில் பதிவான நிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டமிட்டே ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்கு வசதியாக பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து உடனடியாக ஸ்மித் கேப்டன் பொறுப்பில் இருந்தும், வார்னர் துணை கேப்டன் பொறுப்பில் இருந்தும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்டனர்.
ஐசிசி நடவடிக்கை
ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டிக்கான முழு ஊதியம் அபராதமாகவும், அடுத்ததாக ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதித்துள்ளது ஐசிசி. ஆனால் பிரச்சினை இத்தோடு முடியவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த பிரச்சினை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. ஸ்மித் மற்றும் வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நாட்டின் பல்வேறு இளைஞர்களுக்கும் முன் உதாரணமானது. இதன் வீரர்களை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இளம் வீரர்கள் வளருகிறார்கள். ஆனால், ஸ்மித், வார்னர் செயல்பாடுகள் அவர்களுக்கு தவறான முன் உதாரணத்தை கொடுத்துவிடும், என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வாரியம் கருதுகிறதாம்.
ஸ்டார் பேட்ஸ்மேன்கள்
ஸ்மித் மற்றும் வார்னர் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விராட் கோஹ்லிக்கு ஈடாக பேசப்படுபவர் ஸ்மித். வார்னர் அதிரடியை காண்பித்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட இரு வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்கும் தகவல், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோஹ்லிய தப்பு சொன்னீங்களே
ஸ்மித் மோசடி செய்தது இது முதல் முறையல்ல. கடந்த வருடம் பெங்களூரில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பெவிலியனில் உட்கார்ந்த வீரர்களை பார்த்து, அவர்கள் கருத்தை அறிந்துகொண்டு, அவுட்டை எதிர்த்து, ரிவ்யூ செய்ய ஸ்மித் முயன்றார். நடுவர் இதை கண்டுபிடித்து கண்டித்து வெளியேற்றினார். இந்திய கேப்டன் கோஹ்லி, ஸ்மித்தின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், கோஹ்லியை, ஆஸி. ஊடகங்கள் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவதாக விமர்சனம் செய்தன. இப்போது ஸ்மித் தனது சேஷ்டையை தொடர்ந்து சிக்கிக்கொண்டுள்ளார்.